வட் வரி தொடர்பாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வட் வரி தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளதுடன் அதன் முதலாவது கலந்துரையாடல் இன்று வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்றது.
வட் வரியினால் தாக்கத்திற்குள்ளாகும் பண்டங்கள் மற்றும் தாக்கத்திற்குள்ளாகாத பண்டங்கள் தொடர்பான தெளிவான அறிவின்மையே சிக்கல் தன்மையை தோற்றுவித்துள்ளதாக இதன்போது வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன் இதற்காக வர்த்தக சமூகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் அறிவூட்டும் வேளைத்திட்டமொன்றின் தேவை பற்றி விளக்கமளித்தனர்.
வட் வரிஎவ்வாறுவிதிக்கப்பட்டுள்ளதென்பது பற்றி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் விரிவாக விளக்கமளித்தார்.
ஒரு நுகர்வுப் பண்டம் இறக்குமதி செய்யப்பட்டது முதல் நுகர்வோரைச் சென்றடையும் வரை இடம்பெறும் விலை மாற்றங்கள் தொடர்பாக உரியவாறு பதிவுசெய்யப்படும் ஒரு முறை காணப்படாமை இப் பிரச்சினைக்குரிய பிரதான காரணமெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இத் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டினார்.
இவ் அனைத்து நடவடிக்கைகளின் போதும் நுகர்வோர் தொடர்பாக கவனம் செலுத்தப்படல் வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வர்த்தக துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தி முறையான ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
வட் வரி தொடர்பாக பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து தரப்பினர்களுடனும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களின் போது வர்த்தக சங்கங்களின் பிரதிநிதி ஒருவரைத் தவறாது பங்கேற்கச் செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் இதன் போது ஆலோசனை வழங்கினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment