வரவு செலவுத்திட்ட 3வது வாசிப்பில் டெலோ கலந்து கொள்ளாது: செல்வம் அடைக்கலநாதன்



தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவரையில் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான் வாக்கெடுப்பில் டெலோவினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
இலங்கை அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுதிட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது.அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கே அந்த ஆதரவினை வழங்கினோம்.
அவர்கள் எதனையும் தமிழர்களுக்கு வழங்க மாட்டார்கள் என்ற நிலைவரும்போது சர்வதேச சமூகத்திடம் நியாயமான கோரிக்கையினை முறையிடும் நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அதனை ஆதரித்தோம்.
ஆனால் தற்போது தமிழீழ விடுதலை இயக்கம் சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மூன்றாவது வாசிப்பில் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை பொதுக்குழு கூட்டத்தில் எடுத்துள்ளோம்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடமும் இது தொடர்பில் கூறியுள்ளோம்.

அதன்காரணமாக வரவுசெலவு திட்டத்தின் எதிர்வரும் மூன்றாவது வாசிப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)வாக்களிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று இரண்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருவர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் சாட்சி சொல்ல வராததன் காரணமாக ஆறு வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சரியான சந்தர்ப்பம் வரும்போது எனது பாராளுமன்ற பிரதிக்குழுக்கள் தலைவர் பதவியை நான் உதறிவிடுவேன்.
அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்களை நாங்கள் முறையாக வழங்க வேண்டும்.அந்த வகையில் நாங்கள் நல்லெண்ண சமிக்ஞையை வழங்கியுள்ளோம்.
இலங்கை அரசாங்கம் ஒருவருட காலத்திற்குள் அதாவது 2016ஆம் ஆண்டிற்குள் தீர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை எமது தலைவர் சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரையில் சர்வதேசத்தின் வருகை இன்று அதிகரித்துள்ளது. எங்களது மக்களை நாங்களே ஆளக்கூடிய வகையில் தீர்வுத் திட்டத்தினை வழங்குவதாக இருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அதனை இலங்கை அரசாங்கம் மறுக்கும் நிலையில் அதனைக்காட்டி இலங்கை அரசாங்கம் பழைய நிலையிலேயே உள்ளது என்பதை சர்வதேசத்திடம் காட்டி எமக்கான நியாயத்தினை கோரமுடியும்.
எங்களது மக்களை நாங்களே ஆளக்கூடிய தீர்வினை வழங்குமாறு ஐ.நா.சபையிலும் கோரிக்கையினை முன்வைக்க முடியும்.
இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்களை வழங்காமல் எதிர்த்தோமானால் எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நிரூபிக்கமுடியாது.
அதன்காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளோம். அவர்கள் ஏமாற்றும் நிலையேற்பட்டால் அதனை தோலுரித்து சர்வதேசத்திற்கு காட்டும் நிலையை ஏற்படுத்துவோம்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உட்பட கட்சி முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com